Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

ஹோட்டல் கழிவுகளை அகற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்

Print PDF
தினமணி         30.05.2013

ஹோட்டல் கழிவுகளை அகற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஹோட்டல் கழிவுகளை அகற்ற பெங்களூர் மாநகராட்சி, பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நோபல் எக்ஸ்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

பெங்களூரில் குப்பை பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பெங்களூர் மாநகராட்சி, பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில், பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை எடுத்துச் செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

பின்னர், பெங்களூர் மாநகராட்சி ஆணையர் சித்தையா செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூரை குப்பை இல்லாத மாநகரமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரில் அதிக குப்பைகளை உருவாக்கும் காரணிகளில் ஒன்றான ஹோட்டல்களில் உருவாகும் கழிவுகளை அகற்ற நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி நிர்வாகம் கனஹள்ளி பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் உருவாகும் கழிவுகளை நோபல் நிறுவனம் எடுத்துச் சென்று பிரித்தெடுத்து, ஈரக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவையும், உலர்ந்த கழிவுகளில் இருந்து பல்வேறு மூலப்பொருள்களையும் தயாரிப்பார்கள்.

இதன் மூலம் குப்பைகளை நிலத்தில் புதைப்பது, அதனால் நிலத்தடி நீர் பாதிப்பது, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகிய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஹோட்டல்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒரு கிலோ கழிவுக்கு 90 பைசாவை ஹோட்டல் நிர்வாகம் வழங்கும். ஒவ்வொரு நாளும் ஹோட்டல்களில் இருந்து 750 மெட்ரிக் டன் வரை குப்பைகள் உருவாகின்றன.

ஒரு டன் குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ரூ.3 ஆயிரத்தை செலவிட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெங்களூரில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகத்தின் பளு சற்று குறைந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.27 கோடியும் மிச்சமாகிறது.

மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர ஹெப்பார், நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவர் நியூரல் பெசார்கர், மண்டல மேலாளர் கிரிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

Print PDF
தினமலர்         29.05.2013

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு


திருநெல்வேலி:பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டியில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தியிடம், புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராமையன்பட்டி குப்பை கிடங்கை நேற்று நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

குப்பை கிடங்கில் வருங்காலங்களில் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகள் பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கொட்டும் பகுதிகளை சுற்றி தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் திடீர் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

குப்பைகளில் வரும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக கொட்டப்படும். மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றி தீ ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன், பி.ஆர்.ஓ மாரியப்பன், தீயணைப்பு அலுவலர் பத்மகுமார், உதவி தீயணைப்பு அலுவுவலர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: ஒரு வாரத்தில் தொழில்நுட்ப ஆய்வறிக்கை

Print PDF
தினமணி        17.05.2013

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: ஒரு வாரத்தில் தொழில்நுட்ப ஆய்வறிக்கை


குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்துக்கான தொழில்நுட்ப ஆய்வறிக்கையை ஒரு வாரத்தில் நிபுணர் குழு அளிக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது. இந்த தொழிற்சாலைகள் அமைக்க மொத்தம் 10 நிறுவனங்கள் பல்வேறு மின்சாரம் தயாரிப்பு முறைகளுடன் மாநகராட்சியை அணுகின. மேலும் நீரி, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்றவற்றின் நிபுணர்களும் சென்னைக்கு வந்து இது தொடர்பாக ஆய்வு செய்தனர். இந்த நிறுவனங்களின் திட்டங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு அளிக்கும் ஆய்வறிக்கை அடிப்படையில் ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டங்களுக்கான நிதி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

கடந்த வாரமே ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிடைக்க வில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆய்வறிக்கை கிடைத்து விடும். அதன் பின்னர், ஒப்பந்தம் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, திட்ட மதிப்பீடு மதிப்பிடப்படும். ஜூன் இறுதிக்குள் டெண்டர் கோரப்பட்டு விடும். ஜூலை மாத தொடக்கத்தில் தொழிற்சாலைகள் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 25 of 66