தினமணி 06.05.2010
ஆரணியில் வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
ஆரணி, மே 5: ஆரணியில் வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் கூறினார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆண்டாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
வறட்சிக் கால குடிநீர்த் திட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தொகுப்பு வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் 5 ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டப்படவுள்ளது.
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 850 கிராமங்களில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிசை வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட குடிசைகளுக்கு மாடி வீடு கட்டித்தரப்படும். ஆரணியில் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார் அவர்.
கோட்டாட்சியர் சாந்தகுமாரி, வட்டாட்சியர்கள் கச்சபாளையம், ராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலர் தேவதாஸ், இடர்ப்பாடு நிவாரண வட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.