தினமணி 06.05.2010
குடிநீர்ப் பிரச்னை இருந்தால் நேரில் புகார் தரலாம்
குடியாத்தம், மே. 5: குடியாத்தம் நகரில் குடிநீர்ப் பிரச்னை இருந்தால் பொதுமக்கள் நேரில் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: குடியாத்தம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர், போடிப்பேட்டை நீரேற்று நிலையங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டால், தங்கள் பகுதி நகரமன்ற உறுப்பினர்களிடமோ, நகராட்சி அலுவலகத்தில் என்னிடமோ (தலைவர்), ஆணையரிடமோ நேரிடையாக தெரிவித்தால் உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதைத் தவிர்த்து எந்தவித தகவலும் இன்றி சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
மீறி சாலை மறியலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நகராட்சி எவ்விதமும் பொறுப்பாகாது என குறிப்பிட்டுள்ளார் பாஸ்கர்.