தினமலர் 17.05.2010
ஆழியார் குடிநீர் அண்ணாநகரில் விநியோகம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்கு, நான்கு லட்சம் ரூபாய் செலவில் ஆழியார் குடிநீர் திட்டத்தின் புதிய பைப் லைன் மூலம் தண்ணீர் விநியோகம் துவங்கியது.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு பகுதிக்கு முதலில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. பின், ஆழியார் குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிணத்துக்கடவு வடக்கு பகுதி முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதால், இப்பகுதிக்கு தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது.
ஆனால், கிணத்துக்கடவு தெற்கு பகுதிகளான அண்ணாநகர், எம்.ஜி.ஆர்., நகர், பகவதிபாளையம், கல்லாங்காட்டுப்புதூர், சிங்காராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
இதன்பேரில், பேரூராட்சி கூட்டத்தில், அண்ணாநகர் பகுதிக்கு ஆழியார் குடிநீர் திட்டத்தில் இருந்து பைப் லைன் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், இதற்காக நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இத்திட்டத்தில் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான கூட்டம் நடந்தது.
இதற்கு, தலைவர் விஜயா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கதிர்வேல் வரவேற்றார். விழாவில், பேரூராட்சி தலைவர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நடராஜ் ஆகியோர் தண்ணீர் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.