தினமணி 27.07.2009
நகராட்சி குடிநீரேற்று நிலையம் பயன்பாட்டில் 7 கிணறுகள் மட்டுமே
அரக்கோணம், ஜூலை 25: அரக்கோணம் நகராட்சி குடிநீரேற்று நிலையத்தில் மொத்தமுள்ள 31 ஆழ்துளைக் கிணறுகளில் 7 கிணறுகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக நகராட்சி பொறியாளர் ஜார்ஜ் தெரிவித்தார்.
அரக்கோணம் நகரில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நகரில் பல இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அரக்கோணம் நகராட்சி 29, 31, 33 வார்டு பகுதிகளான பழனிபேட்டை, டி.என்.நகர், சோமசுந்தரநகர் ஆகிய பகுதிகளின் கவுன்சிலர்கள் துரை.சீனிவாசன்(காங்), செல்வம்(அ.தி.மு.க), பொன்.பார்த்திபன்(அ.தி.மு.க) ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளின் மக்கள் பழனிபேட்டையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல் சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் மறியல் செய்வோரை சமாதானப்படுத்த நகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூட வராததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த நகரமன்றத் தலைவர் விஜயராணிகன்னையன், துணை தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசிய தலைவர், அதிகாரிகள் ஒருவர் கூட பொறுப்பில் இல்லாததையும், இருப்பவர்களும் வெளியூரில் இருந்துகொண்டு பணிக்கு வருபவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பொறுப்பு அதிகாரியை விரைவில் அனுப்புவதாக ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து பொதுமக்களிடம் இரண்டொரு நாளில் பிரச்னை தீர்ந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரமன்றத் தலைவர் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் வாபஸôனது.
இதையடுத்து சரியாக இரண்டு மணி நேரத்தில் நகராட்சி பொறியாளராக ஜார்ஜ் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனே நகரமன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுடன், புதுகேசாவரத்தில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அரக்கோணம் நகராட்சி நீரேற்று நிலையத்தில் மொத்தம் 31 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதில் தற்போது 7 கிணறுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதிலும் மூன்று கிணறுகள் தற்போது பழுதடைந்து உள்ளன. இரண்டொரு நாளில் அவை சரிசெய்யப்படும். மேலும் வரும் செவ்வாய்க்கிழமை நகரமன்றத்தின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைவில் மேலும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதன் பிறகு ஓரளவு பிரச்னை சீராகலாம் என்றார் பொறியாளர் ஜார்ஜ்.