தினமலர் 15.05.2010
குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி: மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு
திருச்சி: மரக்கடை குடிநீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணியை மேயர், கமிஷனர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகரின் மையப்பகுதியான மரக்கடையில் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மெகா சைஸ் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. 30ஆண்டுக்கு முன் இந்த தொட்டி கட்டப்பட்டது. தொட்டியின் கீழ் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. 12, 14 மற்றும் 16 முதல் 21 வரை ஆகிய 8 வார்டுகளுக்கு இந்த தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க மாநகராட்சியின் பொதுநிதியிலிருந்து 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் இந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்காத வண்ணம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக வட, தென்புறம் என இரு பகுதியாக பிரித்து, தற்போது தென்புறம் குடிநீர் தொட்டி சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணி நிறைவு பெற்றவுடன் வடபகுதி சீரமைப்பு பணி துவங்கும். தற்போது தென்புரத்தில் சீரமைப்பு நடைபெறுவதால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல் நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சீரமைப்பு பணிகளை மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.