Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரைப் பரிசோதித்து விநியோகிக்க அறிவுரை

Print PDF

தினமணி     18.05.2010

குடிநீரைப் பரிசோதித்து விநியோகிக்க அறிவுரை

தேனி, மே 18: உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தன்மையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் பொற்கைப்பாண்டியன் கூறினார்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே 11-ம் தேதி முதல் பொதுமக்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப் பாதிப்பால் இதுவரை 4 பேர் இறந்துள்ளனர்.

இப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முகாம்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் ஆகியவற்றை பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர், கொள்ளை நோய் தடுப்புத் துறை இணை இயக்குநர் ஜெயக்குமார், விருதுநகர் மாவட்ட பொது சுகாதரத் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

பின்பு, தேனியில் மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பணியாளர்கள், வருவாய்த் துறையினர், குடிநீர் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பஙகேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் பேசியதாவது:

வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உத்தமபாளையம், சின்னமனூர், போடி, கம்பம் அரசு மருத்துமனை ஆகியவற்றில் இதுவரை 627 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 150 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தமபாளையம் பகுதியில் 4 மருத்துவக் குழுவினர், சின்னமனூரில் 13 குழுவினர், ஒரு நடமாடும் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குடிநீராதாரங்கள் மாசுபட்டதாலும், குடிநீரை முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யாததாலும், திறந்த வெளிக் கழிப்பிடங்களாலும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் 15 இடங்களில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், தரம் மற்றும் அளவு குறைவாக குளோரின் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் குடிநீர் வாரியப் பணியாளர்கள் குடிநீரை முறையாக நிர்ணயித்துள்ள அளவு குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். ஆயிரம் லிட்டர் நீருக்கு 4 கிராம் வீதம் குளோரின் கலக்க வேண்டும். வீடு மற்றும் கடைகளில் பயன்படுத்தும் குடிநீரில் 20 லிட்டருக்கு ஒரு குளோரின் மாத்திரை கலக்கலாம்.

கிராம சுகாதாரக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியை குளோரின் வாங்குதல் உள்ளிட்ட வயிற்றுப் போக்கு நோய் தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குளோரினை குடிநீர்த் தொட்டியில் நேரடியாக கொட்டாமல், நீரில் கரைத்து தெளிந்த நீரை சுண்ணாம்பு நீக்கி தொட்டியில் ஊற்ற வேண்டும்.

குடிநீரின் தன்மை மற்றும் குளோரின் அளவு ஆகியவற்றைப் பரிசோதித்து விநியோகம் செய்ய அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு களர்நீர் பரிசோதனைப் பெட்டிகள் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி தினமும் குடிநீரைப் பரிசோதித்து விநியோகம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரைப் பொதுமக்கள் காய்ச்சி ஆற வைத்துப் பருக வேண்டும் என்றார் பொற்க்கைப்பாண்டியன்.