தினமணி 21.05.2010
ஆக. 6-ல் துணை முதல்வர் அடிக்கல்
கடையநல்லூர், மே 20: கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள புதிய குடிநீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆக. 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸ் தெரிவித்தார்.
கடையநல்லூர் பகுதியில் 1300 பயனாளிகளுக்கு, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகையினைவழங்கி, பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.ஏ. மேலும் பேசியதாவது:
இது போன்ற திட்டங்களுக்கு தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இத்திட்டத்திற்கு ரூ. 17 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வரை பாராட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும். அப்படி பாராட்டினால்தான் மேலும் நல்ல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்.
கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் முழு மானியத்துடன் புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நிதி ஒதுக்கியுள்ளனர். இதற்கான அடிக்கல்நாட்டு விழா ஆக. 6-ஆம் தேதி கடையநல்லூரில் நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்றார் பீட்டர்அல்போன்ஸ்.