தினகரன் 26.05.2010
வாரியம் நடவடிக்கை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு 500 புதிய போர்வெல்
பெங்களூர், மே 26:பெங்களூர் நகரில் கூடுதலாக 500 போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ராமமூர்த்தி தெரிவித்தார்.
கோடை மழை சில நாட்களாக பெய்து வரும் நிலையில் பெங்களூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. தற்போதே அப்பகுதியில் தோண்டப்படும் போர்வெல்களில் 20% தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி குழாய்களில் 2 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது எந்தவித அறிவிப்பும் இல்லாமல் குடிநீரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நகர குடிநீர் வடிகால் வாரிய தலைவர் பி.பி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளதாவது, மாநகராட்சியில் ஏற்கனவே 400 போர்வெல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் மேலும் 500 போர்வெல்கள் அமைக்கப்படும். சில இடங்களில் மாநகராட்சி தோண்டியுள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.
கே.ஆர்.புரம், மகதேவபுரா மற்றும் பெனகனஹள்ளி பகுதியில் தோண்டப்பட்ட பெரும்பாலான போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் திப்ப குண்டனஹள்ளி நீர்தேக்கத்தில் நீர்மட்டம் 14 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் பெங்களூர் மேற்கு பகுதிக்கு மட்டும் மே மாத இறுதிவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் தண்ணீர் வழங்க முடியும். இவ்வாறு குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ராமமூர்த்தி கூறினார்.