தினகரன் 27.05.2010
4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்
கோவை, மே 27: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:
சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது பருவமழை உரிய காலத்தில் துவங்காததால் தற்போது அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீரை கொண்டு மாநகர மக்களுக்கு தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படாத சூழ்நிலை உள்ளது.
எனவே கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள்: 34, 35, 48, 49, 50, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 மற்றும் 64, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள்: 25, 27, 28, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 மற்றும் 54, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 30, 31, 32 மற்றும் 33 பகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்து உள்ளது.தென்மேற்கு பருவமழை பெய்து அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவினை எட்டிய பின்பு மீண்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கன முறையில் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.