Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.200 கொடுத்து வாங்கும் அவலம் குடிநீருக்காக அல்லாடும் துவாரகா பகுதி மக்கள்

Print PDF

தினகரன்   27.05.2010

ரூ.200 கொடுத்து வாங்கும் அவலம் குடிநீருக்காக அல்லாடும் துவாரகா பகுதி மக்கள்

புதுடெல்லி, மே 27: துவாரகாவில் நாளுக்கு நாள் குடிநீர் விநியோகம் மோசமடைந்து வருகிறது. பல பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.200 கொடுத்து கை வண்டிகளில் வரும் தண்ணீரை வாங்குகின்றனர்.

துவாரகா பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டி.டி..) கவனித்து கொள்கிறது. ஆனால், இப்பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் எப்போது வரும் என்று இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

பாக்கெட் & பி, செக்டர் 14ஐ சேர்ந்த ஆசிர் என்பவர் கூறுகையில், "தினம் குடிநீர் பிரச்னை ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம். ஆனால், குடிநீர் இல்லாமல் வாழ முடியுமா? இப்போது அடிக்கும் கோடை வெப்பத்தில் ஒன்றுக்கு இரண்டு குடம் தண்ணீர் செலவாகிறது. குடிப்பதற்கே குடிநீர் இல்லாத நிலையில், ஏர் கூலர்களுக்கு தண்ணீர் கிடைக்காததால், கோடை வெப்பத்தில் வெந்து சாகும் நிலையில் இருக்கிறோம். குடிநீர் விநியோகத்தை சீர்செய்வதாக டி.டி.. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரையில் எந்த விநியோகமும் சரியாகவில்லை. இதனால் ரூ.200 கொடுத்து தண்ணீரை வாங்குகிறோம்" என்றார் வெறுப்புடன்.

இதே பகுதியைச் சேர்ந்த பதக் என்பவர் கூறுகையில், "டி.டி.டி. தலைமை இன்ஜினியர் எஸ்.ஆர்.சோலங்கியிடம் குடிநீர் விநியோகத்தை சரி செய்யக்கோரி நான் மனு கொடுத்தேன். தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி கூறினார். ஆனால், இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை" என்றார். இதுகுறித்து அதிகாரி சோலங்கியிடம் கேட்டபோது, "துவாரகா பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு தண்ணீரை டெல்லி குடிநீர் வாரியம் விநியோகிக்கவில்லை. இதனால்தான் குடிநீர் விநியோகம் சரியாக நடைபெறவில்லை" என்றார்.

ஆனால், குடிநீர் வாரியத்தின் குடிநீர் பணிகளுக்கான உறுப்பினர் ஆர்.கே.கார்க்கிடம் கேட்டபோது, "டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. துவாரகா பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் மிக நீண்ட தொலைவு செல்கிறது. இதில் நடுவில் பல பகுதிகளில் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு நடைபெறுகிறது. இதை சரி செய்வதற்காக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம். துவாரகாவுக்கு தேவையான அளவு தண்ணீரை நாங்கள் விநியோகித்து கொண்டுதான் உள்ளோம்" என்றார்.