தினகரன் 28.06.2010
காரைக்குடி நகராட்சியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை
காரைக்குடி மே 28: காரைக் குடி நகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் பராமரிப்பு குறித்த ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.
காரைக்குடி நகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மேல்நிலை தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் மணி, இளநிலை பொறியாளர் வேலுச்சாமி உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் திருச்சி சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்தேக்கதொட்டியில் தினமும் முறையாக குளோரின் கலக்கப்படுகிறதா, 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆணையர் கூறுகையில், ‘காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு மக்களுக்காக 10 ஆயிரத்து 948 குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்துக்காக சுப்பிரமணியபுரம் பகுதியில் இரண்டரை லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, செக்காலை ரோட்டில் 15 லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, சுப்பிரமணியபுரம் (தெற்கு) பகுதியில் 4 லட்சம் லி., கொள்ளளவு தொட்டி, மகர்நோன்பு திடலில் 15 லட்சம் லி., கொள்ளளவு, கல்லுகட்டியில் ஒன்றரை லட்சம் லி., கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 75 லட்சம் லி., குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தொட்டிகளில் குளோரின் கலப்பு, சுத்தம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் லிட்டர் நீருக்கு, 400 கிராம் குளோரின் அளவு இருக்கிறதா, தண்ணீர் சுத்தம் செய்யும் ஸ்கவர் வால்வு முறையாக திறக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரின் மூலம் மக்களுக்கு ஏதேனும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முறையாக தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது‘ என்றார்.