தினகரன் 31.05.2010
கம்பத்தில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு துவங்க அனுமதி
கம்பம்: கம்பத்தில் குடிநீர் வாரியத்தின் பராமரிப்பு பிரிவு அலுவலகம் நாளை (ஜூன் முதல் தேதி) முதல் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், கேபிடி திட்டம் உள்ளிட்ட 10 குடிநீர் திட்டங்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, உதவி செயற்பொறியாளர் தலைமையிலான பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஒன்றை கம்பத்தில் ஏற்படுத்த நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டது.
சமீபத்தில் உத்தமபாளையம் பகுதியில் ஏற்பட்ட காலரா பாதிப்பு காரணமாக பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அலுவலகம் நாளை (ஜூன் முதல் தேதி) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள் நியமிக்கப்படுவார்கள்.
இப்பகுதியில் உள்ள 10 குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு பணிகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும். பகிர்மான குழாய்களில் ஏற்படும் கசிவு, குழாய் உடைதல், பம்பிங்கில் ஏற்படும் பிரச்னைகள், குளோரினேசன் உள்ளிட்ட பல பணிகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும்.