தினகரன் 31.05.2010
கத்திவாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏன்?
திருவொற்றியூர். மே 31: கத்திவாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுவது குறித்து நகராட்சி தலைவர் திருசங்கு விளக்கம் அளித்துள்ளார்.
கத்திவாக்கம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, ரூ.6.22 கோடி செலவில் ‘குடிநீர் அபிவிருத்தி திட்டம்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும், 2 கீழ்நிலை தொட்டிகளும் கட்டப்பட்டன.
நகராட்சி முழுவதும் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்களும் பதிக்கப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இவ்வாறு அனைத்து பணிகளும் முடிந்தும், இதுவரை இணைப்பு கொடுக்கப்பட்ட பல வீடுகளுக்கு குடிநீர் வரவடில்லை. இதனால், ரூ.6.22 கோடி செலவழித்தும், குடிநீர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை.
இதுகுறித்து நகராட்சி தலைவர் திருசங்கு கூறியதாவது:
11 லட்சம் லிட்டர் குடிநீர் இருந்தால், பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கொடுக்க முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டது. மணலி குடிநீர் மையத்திலிருந்து கத்திவாக்கம் வரை, சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 அங்குல குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரும் இந்த குழாயை 12 அங்குலமாக மாற்றினால்தான் குடிநீர் வேகமாக வந்து, தொட்டியின் கொள்ளளவு முழுமையடையும்.
இதுபற்றி குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை குழாய் மாற்றப்படாததால், எப்போதும் போல் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்னையில் அவதிப்படுகின்றனர். லாரி மூலம் குடிநீர் விநியோகிப்பதால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவாகிறது. இவ்வாறு நகராட்சி தலைவர் திருசங்கு கூறினார். நகராட்சி தலைவர் விளக்கம்