தினமணி 02.06.2010
தஞ்சை மாவட்ட குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு
தஞ்சாவூர், ஜூன் 1: தஞ்சாவூர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என விடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியருடன் உரையாடிய தலைமைச் செயலர் ஸ்ரீபதி தெரிவித்தார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்துடன் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், வருவாய்த் துறை செயலர் கி. தனவேல் ஆகியோர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவை குறித்து விடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தலைமைச் செயலர் ஸ்ரீபதி மாவட்டத்தில் குடிநீர்த் தேவையை உடனடியாக சரி செய்ய முதல் கட்டமாக ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
உரையாடலில் ஆட்சியர் சண்முகம் ஒதுக்கப்பட்ட நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவசர குடிநீர்த் தேவைகளுக்கு பயன்படுத்தபடும் எனவும், மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் தேவதாஸ் பொன்னையா, நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் சாந்தி, குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர்கள் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.