தினமலர் 03.06.2010
குடிநீர் தேவைக்கு ரூ.25 லட்சம் தஞ்சை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு குடிநீர் தேவைக்காக ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வீடியோ கான்ஃபரன்ஸ் ஆய்வில் உத்தரவிட்டார். தமிழக அரசு தலைமை செயலாளர் ஸ்ரீபதி மற்றும் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷனர் சுந்தரதேவன், வருவாய்த்துறை செயலர் தனவேல் ஆகியோர் கலெக்டர் சண்முகம் மற்றும் அலுவலர்களுடன் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் கோடைகால அவசர குடிநீர் தேவை குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்திட முதல்கட்டமாக ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும், அதன்மூலம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் மூலம் அவசர குடிநீர் தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்தார். இதில் பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் தேவதாஸ் பொன்னையா, நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.