தினகரன் 07.06.2010
பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு
பெங்களூர், ஜூன் 7:பெங்களூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் திப்பகொண்டனஹள்ளி அணையின் நீர்மட்டம் 12 அடியாக குறைந்துவிட்டது. இதனால் பெங்களூர் குடிநீர் வினியோக வாரியம் 135 எம்.எல்.டி. தண்ணீருக்கு பதிலாக 20 எம்.எல்.டி. தண்ணீரை தினமும் பெற்றுவருகிறது.
ஆர்.டி.நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வடக்கு புவனேஸ்வரி நகர் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை மோசமாக பாதித்துள்ளது. பெங்களூர் கிழக்கு பகுதியிலும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் குடங்களை கட்டி தண்ணீர் கொண்டு வந்து ரூ.8க்கு விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தண்ணீரால் பரவக்கூடிய நோயும் அதிகரித்துவருகிறது. டி.ஜே.ஹள்ளி, சுல்தான்பாளையா, டேனரி சாலை, பிரேசர் டவுன், பின்னமங்களா, கே.ஆர்.புரம், நியூ திப்பசந்திரா, விஜினபுரா, மாகடி சாலை, விஜய்நகர், டி.தாசரஹள்ளி, சித்தாபுரா, லக்கசந்திரா தொட்மாவள்ளி ஆகிய இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டி.ஜி. ஹள்ளி அணையில் 74 அடி வரை நிரப்பமுடியும் என்றாலும் 2009ம் ஆண்டு 31 அடி வரை தான் தண்ணீர் நிரம்பியது. போதிய மழையின்மை காரணமாக அணை நிரம்பவில்லை. கடந்த மே மாதம் முதல் குடிநீர் வினியோக வாரியம் 240 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளது.
ஆனால் இதுவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்று குடிநீர் வினியோக வாரியத்தின் தலைமை இன்ஜினியர் வெங்கடராஜூ தெரிவித்தார்.