தினமலர் 08.06.2010
அவனியாபுரத்திற்கு காவிரி குடிநீர் திட்டம்
அவனியாபுரம்: காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அவனியாபுரத்தில் செயல்படுத்துவது குறித்த அவசர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. உலகவங்கி உதவியுடன் அவனியாபுரத்தில் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வைகையில் சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. பருவமழை பெய்யாத காலத்தில் அவனியாபுரத்திற்கு குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தச்சம்பத்து கிணறுகளில் உறைகளை இறக்குவது போன்ற நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் இறங்கினாலும், குடிநீர் தட்டுப்பாடு எப்போதாவது ஏற்படும். இதனை தவிர்க்க, காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் அவனியாபுரத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய பணிகள் நடந்து வருகின்றன. குடிநீர் வடிகால் வாரியம் இப்பணிக்கு 62.66 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்துள்ளது. இதற்காக நேற்று நடந்த அவசர கவுன்சில் கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் போஸ்முத்தையா தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ஞானசேகரன் முன்னிலை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர்கள், நகராட்சிகளின் மண்டல துணைஇயக்குனர் அலுவலக இன்ஜினியர்கள் மருதுபாண்டி, நடராஜன் திட்டம் குறித்து விளக்கினர். கவுன்சில் கூட்டத்தில் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர் கார்த்திகேயன் நன்றி கூறினார். திட்ட மதிப்பீட்டு தொகை 62.66 கோடி ரூபாயில் 30.33கோடி ரூபாய் மத்திய அரசும், 12.15 கோடி ரூபாய் மாநில அரசும் மானியமாக வழங்க உள்ளன. மீதமுள்ள தொகை நகராட்சி பங்கு ஆக இருக்கும்.