தினகரன் 09.06.2010
பராமரிப்பு பணி திருவாரூர் மாவட்டத்தில் 3 நாள் குடிநீர் நிறுத்தம்
திருவாரூர், ஜூன் 9: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படும் திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுபற்றி கலெக்டர் சந்திரசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருவாரூர் நகராட்சி, திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 3 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த நாட்களில் சம்மந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் பராமரிப்பு கோட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பராமரிப்பு பணி நடைபெறும் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஒத்துழைக்கவும். முன்னதாக வரும் குடிநீரை சேமித்து வைத்து பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.