தினமணி 14.06.2010
தி.மலை 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு
திருவண்ணாமலை, ஜூன் 13: திருவண்ணாமலை நகராட்சி 7-வது வார்டு பே கோபுரத் தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
4-வது தெரு பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு அப்பகுதி மக்கள் நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி பெரியதெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து பே கோபுரம் 4-வது தெருவுக்கு ரூ.2 லட்சம் செலவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியை நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார் (படம்). துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் ஆர்.சேகர், கவுன்சிலர் கார்த்திவேல்மாறன், சேட்டு முருகேசன், விஜயரங்கன், நாராயணன் கலந்து கொண்டனர்.