தினகரன் 17.06.2010
புளியங்குடி பகுதியில் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டம் நகராட்சி தலைவர் தகவல்
புளியங்குடி, ஜூன், 17: புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட ரூ.1 கோடி செலவில் வாலமலையாறு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமென நகராட்சி தலைவர் டாக்டர் துரையப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கலெக்டர் ஜெயராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புளியங்குடி நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து ஒரு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் என்னையும், தொகுதி எம்எல்ஏ டாக்டர் சதன்திருமலைக்குமாரையும் அவதூறாக பேசியுள்ளனர்.
நகராட்சி தலைவர் என்ற முறையில் தமிழக முதன்மை செயலாளர் நிரஞ்சன்மார்டியைச் சந்தித்து அரசு நிதியாக ரூ.50 லட்சமும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.25 லட்சமும் மற்றும் நகராட்சி பொதுநிதியை சேர்த்து ரூ.1 கோடி செலவில் வாலமலையாறு குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு இன்னும் விரைவில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண உள்ளோம்.
நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆழ்துளை கிணறுடன் கூடிய மின்மோட்டார் பொருத்தப்பட்ட தொட்டி பல இடங்களில் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.