தினமலர் 18.06.2010
6
ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 100 : தூத்துக்குடி மாநகராட்சி புது ஸ்டைல்தூத்துக்குடி : 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நூறு ரூபாயிற்கு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் சரவணன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணி 2.402 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிமென்ட்தளம், சிறுகால்வாய் கட்டும் பணிகளுக்கு ஏழரை கோடி ரூபாயிற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி ராஜாஜி பூங்கா நீர்த்தேக்க நிலைய வளாகத்தில் புதியதாக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிணற்றுநீரை குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தனியார் லாரிகள் மூலம் பிடித்து செல்ல ஏதுவாக 6 ஆயிரம் லிட்டருக்கு நூறு ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இந்த பணத்தை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான தீர்மானமும் இன்றைய அவசர கூட்டத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.