தினமணி 18.06.2010
கோவையில் இன்று முதல் குடிநீர் விநியோகம் மாற்றம்
கோவை, ஜூன் 17: கோவை மாநகராட்சியில் சிறுவாணி குடிநீர் விநியோக பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் போதுமான அளவு மழை பெய்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேற்கு, தெற்கு மண்டலங்களில் வெள்ளிக்கிழமை முதல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.