தினகரன் 22.06.2010
முக்கடல் அணை குடிநீர் குழாயில் உடைப்பா? அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவில், ஜூன் 22: முக்கடலில் இருந்து நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணை மற்றும் அனந்தனாறு சானலில் இருந்து குடிநீர் பெறப்பட்டு கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன்கோவில் இடையே உள்ள குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களில் இந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு விடும். இந்நிலையில் கடந்த பல நாட்களாக கிருஷ்ணன் கோயில் எதிரே சன்னதி தெருவில் உள்ள கழிவு நீரோடையில் அதிகளவில் தண்ணீர் தெளிந்த நிலையில் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன்கோயில் முன்பு உள்ள சந்திப்பில் முக்கடலில் இருந்து குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. எனவே தற்போதும் குழாய் உடைந்து அதிகளவில் குடிநீர் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீருக்காக நாகர்கோவில் தவித்து வரும் நிலையில் இவ்வாறு அதிகளவில் நீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறியதாவது: கிருஷ்ணன்கோயில் பகுதியில் குழாய் உடைந்ததாக இதுவரை புகார் வரவில்லை. கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் காலை, மதியம் மற்றும் மாலையில் தொட்டிகளை சுத்தம் செய்து அதன் கழிவு நீரை வெளியேற்றுவார்கள். ஒருவேளை அந்த தண்ணீராக இருக்கலாம். எனினும் உடனடியாக இதுபற்றி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.