தினமலர் 29.06.2010
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணி விரைவில் துவக்கம்
தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ. 276 கோடியில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிட்டப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான முதல் கட்ட பணிகள் கடந்த பிப்ரவரியில் இருந்து துவங்கி நடந்து வருகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி ஐந்து தொகுப்பாக பிரிக்கப்பட்டு, முதல் கட்ட தொகுப்பு பணிகளுக்காக கூத்தப்பாடி பஞ்சாயத்து பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் நிலத்தடி நீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 276 கோடியில் இரண்டாம் கட்ட தொகுப்பு பணிகளுக்கள் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளில் மடம் கிராமத்தில் உள்ள பெரிய சமநிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஊத்தங்கரை வரை 2,106 கி.மீ., தூரம் பிரதான குழாய்கள் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் பதிக்கபட உள்ளது. இக்குழாய்கள் மூலம் தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஐந்து யூனியனில் உள்ள 1,698 ஊரக குடியிருப்பு பகுதிகள் மற்றும் பென்னாகரம், ஊத்தங்கரை ஆகிய இரு டவுன் பஞ்சாயத்துக்கு தேவையான குடிநீர் கொண்டு செல்லப்படும். தொகுப்பு இரண்டு பணிகள் முடிந்த பின்னர் தொகுப்பு நான்கு பணிகள் 475 கோடி மதிப்பிலும், மூன்றாம் தொகுப்பு பணிகள் அதன் பின்னர் துவங்கப்படும்.