தினகரன் 20.07.2010
சிவகாசியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
சிவகாசி, ஜூலை 20: சிவகாசி நகராட்சிக்குட்பட்ட பழநியாண்வர் காலனி மற்றும் காந்திநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும்வகையில் கீழ்நிலை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
சிவகாசி நகருக்கு மானு£ர் கூட்டு குடிநீர்த்திட்டம் மற்றும் வெம்பக்கோட்டை அணை திட்டம் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை வீட்டு இணைப்புகளுக்கு சுழற்சி அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நகரில் 5 இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. சிவகாசியின் முக்கிய பெரிய மேல்நிலை தொட்டியான காமராஜர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் வந்து சேருகிறது. இது நிரம்பியவுடன் மீதமுள்ள 4 தொட்டிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
இதில் நகரின் கடைகோடியிலுள்ள காந்திநகர் மேல்நிலை தொட்டி மற்றும் நகர் மையத்தில் உள்ள பழனியாண்டவர் மேல்நிலை தொட்டிக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் சென்றடைய சுமார் 14 மணி நேரம் பிடிக்கிறது. இதனால் நகராட்சிக்கு கூடுதலாக மின்செலவு, கசிவு மூலம் தண்ணீர் வீணாகி வந்தது. மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளான பழனியாண்டவர் காலனி, பழைய விருதுநகர் ரோடு, உசேன் காலனி, நேஷனல் காலனி, சோலை காலனி, காந்தி நகர், பராசக்தி காலனி, வேலாயுதம் ரோடு, ரத்தினம் நகர், பெரியகுளம் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்துவந்தது.
நகரின் பிற பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும்போது இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னையால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களுக்கும் 3 நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கவும், தேவையற்ற மின்செலவுகளை குறைக்கவும் புதிய திட்டம் வகுத்தது.
இதன்படி பழனியாண்டவர் காலனி மற்றும் காந்தி நகர் பகுதியிலுள்ள மேல்நிலை தொட்டிகளின் அருகே தலா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 கீழ்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டன. அதன்மூலம் காமராஜர் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரினை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. பின்பு கீழ்நிலை தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு நீரை ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 6 மாதம் நடந்த இப்பணிகளில் தற்போது பழனியாண்டவர் காலனி பகுதியில் மட்டும் முடிவடைந்தது. கடந்த வாரம் புதிய கீழ்நிலை தொட்டி திறக்கப்பட்டது. காந்தி நகர் தொட்டியில் பணிகள் முடிவடைந்து மின்சப்ளையும் பெறபட்டு பரிசோதனை முறையின் கீழ் தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னையில் சிக்கி தவித்த காந்திநகர் மற்றும் பழனியாண்டவர் காலனி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.