மாலை மலர் 26.07.2010
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது
நகரி, ஜூலை. 26- ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டு கண்டலேறு அணையை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்னை புழல் ஏரிக்கு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருவதால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் மொத்த உயரம் 885 அடி. தற்போது அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து இருப்பதால் 830.80 அடி உயரத்தை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் அணை நிரம்பி விடும்.
இந்த அணை நிரம்பினால் சென்னைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர நீர்ப்பாசன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.