தினமணி 27.07.2010
வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க அமைச்சர் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஜூலை 26: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் இ.பெரியசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்டம், கட்டளை பகுதியிலிருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் உள்ளோர் பயனடையும் வகையில், வேடசந்தூர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.
இதில் கோவிலூர் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை அமைச்சர் திங்கள்கிழமை பார்வையிட்டார். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.