தினமலர் 28.07.2010
ரூ.169 கோடி குடிநீர் திட்டம் செப்.,ல் முதல்வர் துவக்கம்: அமைச்சர் நேரு
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதியுதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சியின் பங்களிப்பையும் சேர்த்து 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தொகுப்புகளாக பிரித்து குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூன்று இடங்களில் பிரதான நீர்சேகரிக்கும் கிணறு, இரண்டு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 88.59 கி.மீ., தூரத்துக்கு பிரதான மற்றும் கிளை குடிநீர் உந்து குழாய், 262.08 கி.மீ., தூரத்துக்கு குடிநீர் விநியோகக் குழாய் மற்றும் 446 கி.மீ., தூரத்துக்கு ஏற்கனவே பதிக்கப்பட்டு பழுதடைந்த குடிநீர் குழாய் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு பணி நடந்து வருகிறது.ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட பிரதான நீர்சேகரிக்கும் கிணறு எண்.3ன் பணி முழுவதும் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகப் பணி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது.இப்பணியியை அமைச்சர் நேரு பார்வையிட்ட பின் கூறியதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் அடுத்த 40 ஆண்டுக்கான குடிநீர் தேவை அடிப்படையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் 169 கோடி ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டும்.ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம், வெள்ளத் தடுப்பு பணி, தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா செப்டம்பர் முதல் வாரம் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி பங்கேற்று குடிநீர் பணியையும் துவக்கி வைக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, நகரப் பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாகப் பொறியாளர் சந்திரன், அருணாச்சலம், உதவி நிர்வாகப் பொறியாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.