தினமணி 29.07.2010
பகிர்மானக் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு
கடலூர், ஜூலை 28: பகிர்மானக் குழாய் உடைந்ததால் கடலூரில் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் புதன்கிழமை பாதிக்கப்பட்டது.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள தீபன் நகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து தீபன் நகர், வரதராஜன் நகர், எஸ்.பி.ஐ. நகர், சேர்மன் சுந்தரம் நகர், சுப்பையா நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. புதன்கிழமை இந்த குடிநீர் தொட்டிக்கு கேப்பர் மலையில் இருந்து, குடிநீர் விநியோகிக்கும் பகிர்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்த சிறிதளவு நீர் மட்டுமே வீடுகளுக்கு வழங்கப் பட்டது. தகவல் அறிந்ததும் நகராட்சித் தலைவர் து.தங்கராசு விரைந்து சென்று பார்வையிட்டார். கெடிலம் ஆற்றைக் கடந்து செல்லும் பகிர்மானக் குழாயில் ஏற்பட்டு இருந்த உடைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. உடைப்பைச் சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது என்றும், வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் சீரடையும் என்றும் தங்கராசு தெரிவித்தார்.