தினகரன் 06.08.2010
தட்டுப்பாட்டால் குடிநீர் வினியோக முறை மாற்றம்
குன்னூர், ஆக.6: குன்னூர் நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது ரேலியா அணையாகும். இதன் உயரம் 43.6 அடி. தற்போது இதில் 35.10 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ரேலியா அணைக்கு முழுமையாக நீர் வராததே இதற்கு காரணமாகும்.
நீர் ஊற்று பகுதிகளில் சேறும், சகதியும் அதிகளவில் இருப்பதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது, மாற்று பாதையில் செல்வது போன்றவற்றால் நீர் வீணாகி வருகிறது. நீண்ட நாட்களாகவே தூர் வராப்படாமல் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும், சூறாவளியாலும் அணைகளில் நீர் வற்ற துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த அணையின் நீர்மட்டம் முழுமையாக காணப்பட்டது. ஆனால், இந்த மாத துவக்கத்திலேயே அணையின் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, மழை குறைவு காரணமாக ரேலியா அணையின் நீர்வரத்து குறைந்து வருகிறது. ஏற்கனவே குன்னூர் நகரில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையின்மை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றார்.