தினகரன் 13.08.2010
செட்டியார்பட்டி பகுதிக்கு விரைவில் தாமிரபரணி குடிநீர் அமைச்சர் பேச்சு
ராஜபாளையம், ஆக.13: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியில் ரூ.2.50 கோடியில் முடிக்கப்பட்டுள்ள சாஸ்தா கோயில் கூடுதல் குடிநீர் திட்ட துவக்க விழா, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய கூட திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தெய்வநாயகம் வரவேற்றார்.
குடிநீர் வடிகால் மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் பொன்னுதுரைச்சி, உதவி தலைவர் தங்கபாண்டியன், பனைவாரிய உறுப்பினர் கார்மேகம், யூனியன் சேர்மன் இந்திரா தனுஷ்கோடி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலவாரிய துணை தலைவர் விபி ராஜன் பங்கேற்றனர்.
திட்டங்களை துவக்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை போக்க முதல்வர் ரூ.600 கோடி ஒதுக்கி உள்ளார். செட்டியார்பட்டி பேரூராட்சி மக்களுக்கு அசையாமணி விளக்கு பகுதியில் இருந்து தினமும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது. இன்று துவங்கிய திட்டம் மூலம் கூடுதலாக 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
வரும் தேர்தலுக்கு முன்பாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘ என்றார்.
கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, நகர செயலாளர் உதயசூரியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.