தினகரன் 13.08.2010
கிருஷ்ணகிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கிருஷ்ணகிரி, ஆக.13: கிருஷ்ணகிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்மோட்டார்கள் பழுதடைந்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ. மற்றும் நகர்மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி நகருக்கு தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் சுண்டேகுப்பம் என்னுமிடத்தில் இருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்க அந்த நீரை நவீன முறையில் சுத்திகரித்து நகராட்சி பகுதியில் பழையபேட்டை, சந்தைப்பேட்டை, லண்டன்பேட்டை, வருவாய் கோட்டாட்சியர் வளாகம் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார்கள் மற்றும் பேனல் போர்டுகள் திடீரென பழுதடைந்தது. இதனால் நகராட்சி பகுதியில் உள்ள சில வார்டுகளில் வழக்கம் போல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதிகளுக்கு லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் குடிநீரை விநியோகம் செய்தனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் ஆகியோர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரனிடம் மின்மோட்டார் மற்றும் பேனல் போர்டு பழுதடைந்ததற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் உயர் மின் அழுத்தத்தால் தான் இந்த பழுது ஏற்பட்டதாக விளக்கமளித்தார். இதையடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யும் வரை ஜெனரேட்டர் கொண்டு குடிநீரை சுத்திகரிப்பு செய்து சீராக குடிநீரை விநியோகம் செய்யும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் பொதுமக்களின் அவசிய தேவையினை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது நகர தி.மு.க. செயலாளர் நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசு மூர்த்தி, அரங்கண்ணல், ஜாவீத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.