தினகரன் 16.08.2010
சிதம்பரம் மேற்கு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் நகராட்சி துணை தலைவர் மனு
அண்ணாமலைநகர், ஆக. 16: சிதம்பரம் நகருக்கு நேற்று வந்த மாவட்ட ஆட்சியரை, நகராட்சி துணைத் தலைவர் மங்கையர்க்கரசி சந்தித்து அளித்த மனு:
சிதம்பரத்தை அழகு படுத்த தாங்கள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும், நகரின் குடிநீர் பற்றாக்குறை போக்குகிற வகையில் வக்காரமாரியில் இரண்டு புதிய போர்கள் அமைத்திட ரூ.18 லட்சத்தை ஒதுக்கீடு செய்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரம் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருவேளையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேற்கு பகுதியில் வக்காரமாரியில் இருந்து மேலவீதி நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் பெறப்பட்டு ஒரு வேளை மட்டும் அதுவும் குறைந்த நேர அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதனால் 20 வார்டு மக்கள் பெரிதும் பாதிக்கின்றார்கள். இதை கருத்தில் கொண்டு, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை மேலவீதி குடிநீர் தேக்க தொட்டியில் சேருகிற வகையில் போல்நாராயணன் தெரு, மாலைக்கட்டி தெரு, வெல்லபிறந்தான் தெரு வழியாக வீரபத்திர சாமி கோயில் தெரு குடிநீர் வால்வில் இணைக்கிற புதிய பைப் லைன் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உத்தேச மதிப்பீடு ரூ.20 லட்சம் ஆகும் என தெரியவருகிறது.
இதனை அமைத்து கொடுத்தால் சிதம்பரம் மேற்கு பகுதியை சேர்ந்த 20 வார்டு பொதுமக்கள் பயன்அடைவார்கள். இதற்கு நிதி ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.