தினமலர் 18.08.2010
நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தல்
விருதுநகர்:நகராட்சி கவுன்சிலர் எஸ். பாலகிருஷ்ணசாமி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனரிடம் கொடுத்த மனு:தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கியதிலிருந்து விருதுநகருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 42.57 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கூட இதுவரை வழங்கவில்லை. விருதுநகருக்கு குடிநீர் வழங்கி வந்த ஆனைக் குட்டம் நீர் தேக்கத்திலிருந்து மிக குறைந்த அளவு தண்ணீரே தற்போது கிடைத்து வருகிறது.
மழையில்லாமல் விருதுநகர் நகர் பகுதியில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் அல்லாத தேவைக்கு பயன்படும் தண்ணீரும் பற்றாக்குறையாக உள்ளது.எனவே விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நிர்ணயிக்கப் பட்ட குடிநீரை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பத்து ஆண்டுகள் கழித்து வழங்க நிர்ணயிக்கப்பட்ட 49.50 லட்சம் லிட்டர் குடிநீர் இப்போது கிடைப்பதற்குண்டான வழிவகை செய்யவேண்டும். வல்லநாடு நீர் படுகையில் கூடுதல் கிணறுகள் அமைத்து கூடுதல் தண்ணீர் பம்பிங் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரியுள்ளார்.