தினமலர் 19.08.2010
கூட்டுகுடிநீர் திட்டப் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என சேர்மன் ஜனகராஜ் பேசினார். விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட நேரு யுவக்கேந் திரா சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி மாணவர்களுக்கு பல் வேறு போட்டிகள் நடத்தப்பட் டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சேர்மன் ஜனகராஜ் பேசியதாவது: நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி விழுப்புரம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் ககன்தீப்சிங் பேடி நகராட்சியில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார். அதன் பேரில் நகராட்சி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை உடனே விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் உடனடியாக துவங்கப்படும். கட்டி முடிக்கப்படாமல் உள்ள இரண்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி விரைவில் முடிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் துவங்கும். மேலும் விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்தவுடன் அனைத்து பகுதிகளிலும் சிமென்ட் சாலை போடப்படும். அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியினை பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சிக்கு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் பேசினார். விழாவில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்தீபன், உதவி பொறியாளர் லலிதா, கணக்கர் சர்தார் பாட்ஷா, நகர அமைப்பாளர் நாச்சிமுத்து, இதயவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.