தினமணி 19.08.2010
கன மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர், ஆக. 18: திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்த கனமழையால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
÷திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது. இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் மூலம் நீர் அனுப்பப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி பூண்டி ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 35 அடியில் 34.80 அடியாக இருந்தது.
÷நாளடைவில் கடுமையான கோடை வெப்பம் காரணமாக 24 அடி வரை நீர்மட்டம் குறைந்து வந்தது. பருவநிலை மாற்றத்தால் இடையிடையே பெய்த மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 26.42 அடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்த கன மழையால் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 26.64 அடியாக உயர்ந்துள்ளது.
÷மேலும் கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு 315 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.