தினகரன் 20.08.2010
ஊர்களின் பட்டியல் தயாரிப்பு குடிநீர் தட்டுப்பாடு போக்க போர்க்கால நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
வேலூர், ஆக. 20: வேலூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் பல இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் நேற்று கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் எந்தெந்த இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது என்பது குறித்து அந்த ஊர்களின் பட்டியலை தயாரித்து தர வேண்டும்.
குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்ய வேண்டும்.வேலூர் பாலாறு புதிய பாலத்தில் விளக்குகள் அமைக்க தேவையான நிதி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. அப்படியிருந்தும் ஏன் இதுவரையிலும் மின்விளக்குகளை அமைக்கவில்லை. உடனடியாக மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
சாலையோரம் இருக்கும் அனைத்து விளம்பர பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். சிஎம்சி மருத்துவமனையில் இருந்து வரும் கழிவுநீர் பாலாற்றில் கலந்து காங்கேயநல்லூர் பகுதிக்கு வருகிறது. எனவே அதை தடுத்து நிறுத்தி அந்த பகுதியிலேயே விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.