மாலை மலர் 25.08.2010
சென்னை புறநகரில் மழை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு 1084 கனஅடி வருகிறது
சென்னை, ஆக.25- வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை நீடித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சோழவரத்தில் 7 மி.மீ., செங்குன்றத்தில் 10 மி.மீ., செம்பரம் பாக்கத்தில் 12 மி.மீ., வீராணத்தில் 3 மி.மீ. மழை பெய்துள்ளது.
மழை காரணமாக அனைத்து குடிநீர் ஏரிகளுக்கும், நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து 1084 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு 285 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 116 கனஅடியும் தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 900 கனஅடி தண்ணீர் வருகிறது.
பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு நேற்று முன்தினம் 1153 மில்லியன் கனஅடியாக இருந்தது. இன்று 1202 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் நீர்பிடிப்பு 1282 மில்லியன் கனஅடியில் இருந்து 1419 மில்லியன் கனஅடியாகி இருக்கிறது. சோழவரம் ஏரியில் 230 மில்லியன் கனஅடி 285 மில்லியன் கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 1702 மில்லியன் கனஅடியில் இருந்து 1759 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. வீராணம் ஏரி நீர்இருப்பு 474 மில்லியன் கனஅடியில் இருந்து 556 மில்லியன் கனஅடியாகி இருக்கிறது.
சென்னை நகரின் குடிநீர் சப்ளைக்கு ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 580 மில்லியன் லிட்டர், மீஞ்சூர் கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் குடிநீர் தற்போது 80 மில்லியன் லிட்டர் வருகிறது.
சென்னை நகருக்கு தினம் 580 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 660 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் ஆகிறது.