தினமலர் 27.08.2010
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா
மேலூர்:மதுரை மாவட்டம் முழுவதும் பயன்பெற உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மேலூரில் இரண்டு மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலூர் நகர் சார்பில், லட்சுமி மண்டபத்திலும், ஒன்றியம் சார்பில் மூவேந்தர் மண்டபத்திலும் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தலைமை வகித்து மூர்த்தி எம்.எல்.ஏ., பேசியதாவது : மதுரை மாவட்டத்திலேயே அதிகளவாக 1128 கான்கிரீட் வீடுகள் மேலூர் பகுதியில் தான் கட்டப்பட உள்ளன. 299 கோடி ரூபாயாக தொடங்கி 784 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மாவட்ட அளவிற்கு தயாராகி உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்றிரண்டு மாதங்களில் மேலூரில் நடைபெறும். மேலூரில் துவக்கப் பட்டுள்ள பாலிடெக்னிக்கில் இந்த ஆண்டு சேர்ந்துள்ள 284 மாணவர்களில் மேலூரை சேர்ந்தவர்கள் 100 பேர் என பேசினார். நகர் செயலாளர் இப்ராஹிம் சேட், ஒன்றிய செயலாளர் ரகுபதி, நகராட்சி தலைவர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.