தினகரன் 06.09.2010
நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்
புதுச்சேரி, செப். 6: புதுவை உழவர்கரை நகராட்சியை சேர்ந்த ஆலங்குப்பம் அருகில் உள்ள அன்னை நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.1.09 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணை பெறப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அந்த வளாகத்தை சுற்றி பாதுகாப்பு மதில் சுவர் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக 73.32 லட்சம் செலவிடப்பட உள்ளது.
இந்த பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்கள் ஷாஜகான், நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் நடத்தி வைத்தனர். ஆலங்குப்பம் கிராம கவுன்சிலர் சுசிலா என்ற விஜயலட்சுமி, பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் சதாசிவம், இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.