தினகரன் 08.09.2010
மழைநீர் சேமிக்க 12 ஏரி புதுப்பிப்பு
பெங்களூர், செப். 8: பெங்களூரில் மழை வெள்ளத்தை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 12 ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஏ அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரில் ஆண்டுதோறும் மழை அளவு அதிகரிக்கிறது. இதனால் உயிர்சேதம், போக்குவரத்து பாதிப்பு, வெள்ளபாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க மழைநீரை ஏரிகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக பிடிஏ&விடம் 14ஏரிகள் புனரமைக்க திட்டமிடப்பட்டது. அவற்றில் 12 ஏரிகளில் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
பெங்களூரில் மழைநீர் கழிவுநீருடன் கலப்பதால் பிரச்னையாகிறது. எனவே, அவற்றை சுத்தப்படுத்தி ஏரிகளில் நீர்செல்வதற்கான கால்வாயில் விடப்படுகிறது. மேலும், ஏரிகளில் நான்கு அடுக்கு வடிகட்டிகள் பயன்படுத்தப்பட்டு கால்வாயிலிருந்து வரும் தண்ணீரிலுள்ள உப்பு, கழிவுகள் வடிகட்டப்படுகின்றன. இதனால் சுத்தமான தண்ணீர் ஏரிகளை சென்றடைகின்றன.
பெங்களூர் மாநகராட்சி இரண்டாவது கட்டமாக 29ஏரிகளை சுத்தப்படுத்த பிடிஏவிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.