தினகரன் 09.09.2010
போர்வெல் நீர் 15 இடங்களில் குடிநீராக சுத்திகரிப்பு எம்.பி. தொகுதி நிதி ரூ.1.5 கோடி மு.க.அழகிரி வழங்கினார்
மதுரை, செப். 9: மதுரையில் 15 இடங்களில் போர்வெல் நீரை குடிநீராக சுத்திகரித்து வழங்க எம்.பி. தொகுதி நிதியில் இருந்து மு.க.அழகிரி ரூ.ஒரு கோடியே 50 லட்சம் வழங்கி உள்ளார்.
மதுரை திடீர் நகர், ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகில் கோமஸ்பாளையம், மஞ்சள்மேடு காலனி, பசுமலை, அண்ணாநகர், சுப்பிரமணிபுரம், கரும்பாலை, எம்.எஸ்.பி.காலனி உள்ளிட்ட 15 இடங்களில் போர்வெல் நீரை குடிநீராக சுத்திகரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சுத்திகரிப்பு நிலையங்கள் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி 50 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் டி.வி.எஸ்.நகர் பூங்கா மேம்பாட்டு பணிக்காக ரூ.40 லட்சமும், ஆரப்பாளையம் கோமஸ் பாளையத்தில் சமுதாய கூடம் கட்ட ரூ.5 லட்சமும் மு.க.அழகிரி தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த பணிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 2 மாதத்தில் முடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.