தினமணி 17.09.2010
திருச்செங்கோடு: 22.75 கோடியில் புதிய குடிநீர் திட்டம்
திருச்செங்கோடு, செப்.15: திருச்செங்கோடு நகர மக்களுக்கு நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய காவிரி நீர் புதிய திட்டத்தை திருச்செங்கோடு நகராட்சி தயாரித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் மூலம் ஆவத்திபாளையத்திலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதில்லை.
பள்ளிப்பாளையம் கலியனூரிலிருந்து காவிரி நீர் எடுக்கப்பட்டு, நகர மக்களுக்கு விநியோகிக்கும் திட்டம் 22.75 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. டுபிட்கோ நிறுவன மூலம் நிதிஉதவி பெற்று இத் திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் நடேசன் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து 500 பயனாளிகளுக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிகளை நடேசன் வழங்கினார். மொத்தம் 30 லடசம் உதவி வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் இளங்கோ, பொறியாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.