தினமணி 17.09.2010
ஓகலிபுரத்தில் 32 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் துவக்கம்
பெங்களூர், செப்.16: பெங்களூர் ஓகலிபுரம் வார்டில் ரூ 32 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை காந்தி நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் துவக்கிவைத்தார்.
ஓகலிபுரம் முக்கியசாலையில் கனரா வங்கி அருகே இருந்து பிளாட்பாரம் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரியம் அருகே சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு 8 அங்குல குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு குடிநீர் வாரியம் அனுமதி அளித்துள்ளது. | 32 லட்சம் செலவிலான இத்திட்டத் துவக்கவிழா ஓகலிபுரத்தில் நடந்தது.
ஓகலிபுரம் வார்டு கவுன்சிலர் குயின் எலிசத் பூஜை செய்ய, குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை காந்திநகர் சட்டப்பேரவை உறுப்பினர் தினேஷ்குண்டுராவ் துவக்கிவைத்தார்.
ஓகலிபுரம் வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத் முயற்சியால் இத்திட்டத்துக்கு இவ்வளவு விரைவாக அனுமதி கிடைத்துள்ளது குறித்து தினேஷ்குண்டுராவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் விவாதித்து மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறிய பிறகு இப்பகுதியில் புதிதாக 8 அங்குல குழாய் பதிக்க ஒப்புக் கொண்டார்கள். மேலும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திக் கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றார் வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத்.