தினகரன் 23.09.2010
ஜெகதளா பேரூராட்சிக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம்
குன்னூர்,செப்.23: குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சி சார்பில் லக்குமனை கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1.63 கோடி செலவில் துவங்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.கடந்த 4 மாதத்துக்கு முன்பு கோத்தகிரி வந்த துணை முதல்வர் ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இத்திட்டத்திற்காக பேரூராட்சி சார்பில் ரூ.33 லட்சம் பங்கு தொகையை அரசுக்கு வழங்க வேண்டும் என்பதால் இத்திட்டம் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜெகதளா பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஒசட்டி, கலைமகள் பிரிவு, கோபாலபுரம், எம்.ஜி.காலனி, பெட்டட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்துதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க இயலாததால் லக்குமனை குடிநீர்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி சார்பில் முதல்கட்டமாக ரூ.17 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகை விரைவில் வழங்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.இதற்கான ஆயத்தப்பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் மேற்கண்ட கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
தற்போது இப்பேரூராட்சிக்கு குன்னூர் எம்.எல்.ஏ.சவுந்தரபாண்டியன் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொது சுகாதார வளாகம், தடுப்பு சுவர், கழிவு நீர் கால்வாய், நடைபாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கான டெண்டர் நேற்று விடப்பட்டுள்ளது என்றார்.