தினமணி 06.10.2010
ஸ்ரீவிலி.யில் புதிய குடிநீர் இணைப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 5: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதால், பொதுமக்கள் 7-ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று முன் வைப்புத் தொகை கட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் க.முத்துக்கண்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களுக்குப் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் முன்பதிவு 7-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. முன்வைப்புத் தொகை வீட்டு உபயோகத்திற்கு ரூ. 5,000, வணிக உபயோகத்திற்கு ரூ. 10,000, தொழிற்சாலைகளுக்கு ரூ. 15,000. பொதுமக்கள் விண்ணப்பத்துடன், முன்வைப்புத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.