தினகரன் 08.10.2010
அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு மாநகராட்சி எச்சரிக்கை
கோவை, அக். 8: அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கமிஷனர் (பொறுப்பு) லோகநாதன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 14வது வார்டிற்குட்பட்ட உடையம்பாளையம், கருவலூர், மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் மாநகராட்சி அனுமதியின்றி வீட்டு குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் குடிநீர் இணைப்பினை துண்டித்தனர்.அனுமதியில்லாமல் குடிநீர் குழாய் இணைப்பு எடுப்பவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்பு பெற நேரிடையாக மாநகராட்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்து குடிநீர் இணைப்பு பெற வேண்டும். மேலும் தற்போது நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் முகாம்களில் உடனுக்குடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகராட்சி கிழக்கு உதவி கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.