தினகரன் 13.10.2010
ரூ20கோடி செலவில் குடிநீர் குழாய் புதுப்பிப்பு
பெங்களூர், அக். 13: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் குடிநீர் வாரியம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி வந்த பைப் லைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மாநிலத்தில் இயங்கி வரும் விக்டோரியா, புவுரிங், வாணிவிலாஷ், கவுசியா, கே.சி.ஜெனரல், மிண்டோ ஆகிய 6 அரசு பொது மருத்துவமனைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் குடிநீர் வாரியம் குடிநீர் இணைப்பு கொடுத்தது. இதற்காக அமைக்கப்பட்ட பைப்புகள் துருப்பிடித்து குடிநீர் வீணாகி வந்தது. ஆரம்பத்தில் குறைவாக கட்டணம் செலுத்தி வந்த மருத்துவமனைகள் நாளடைவில் ஆண்டுக்கு தலா ரூ.75 லட்சம் வரை கட்டணம் செலுத்தும் வகையில் பில் செலுத்தி வந்தன. இவ்வளவு குடிநீர் கட்டணம் வருவது மருத்துவமனை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனிடையில் பெங்களூர் குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்திருந்த குறைகேட்பு நிகழ்ச்சியில் மருத்துவமனைகள் சார்பில் பெங்களூர் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ஆஜராகி அதிகமாக குடிநீர் கட்டணம் வருவது குறித்தும் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து குடிநீர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு நடத்தினர். இதில் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ள இரும்பு பைப்புகள் துருப்பிடித்து தண்ணீர் வீணாகியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரூ20 கோடி செலவில் துருப்பிடித்த பைப்புகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் குடிநீர் வாரியம் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுக்கு தலா ரூ.75 லட்சம் கட்டணம் செலுத்தி வந்த மருத்துவமனைகள் இனி ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கட்டணம் செலுத்தும்.