தினகரன் 21.10.2010
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு சின்னாறு குடிநீர் திட்டத்தில் பென்னாகரம் மக்கள் மகிழ்ச்சி
பென்னாகரம், அக்.21: சின்னாறு குடிநீர் திட்டத்தின் கீழ், பென்னாகரம் மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வற்றாத ஜீவ நதியான காவிரி ஆறு பாய்ந்தாலும் 16 கி.மீ. தொலைவில் உள்ள பென்னாகரம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தனர். கோடை காலங்களில் குடம் தண்ணீர் ரூ.2க்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சின்னாறு குடிநீர் திட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக
ரூ4.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து பொதுகுழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு சின்னாறு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பென்னாகரம் மணியகாரத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வீரமணி, பச்சியப்பன், ஷாஜகான், வையாபுரி, பாரதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பென்னாகரம் இன்பசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது அனிபா, தலைமை எழுத்தர் பெருமாள், பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் படிப்படியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கடும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வந்த பென்னாகரம் மக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு கிடைப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னாறு குடிநீர் திட்டத்தின் கீழ், பென்னாகரம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இன்பசேகரன் எம்.எல்.ஏ. குடிநீர் குழாயை திறந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.